Tuesday, 28 June 2011

அழகு





அழகாய் இருப்பதாகச் சொல்ல


அழகு இருக்க வேண்டாம்..


அன்பு மட்டும் போதும்..



Thursday, 16 June 2011




உன்னிடமிருப்பது

தொற்றுவியாதி தான்..

அருகில் நீ வந்ததும்

என் முகத்திலும் தொற்றிக்கொண்டது...

உன் புன்னகை!

காண வருகையில்

தூரம் தெரிவதில்லை..

திரும்புகையில்,

நீண்ட சாலைகளும்,

அதைவிட நீண்ட சாரியில்

வாகனங்களுமாய்..

பொழுதும் நீள்கிறது!

எழுதுவதெல்லாம்

  உனக்கென்றானபின்,

எழுத்தைவிட இனியது எது?!

Tuesday, 14 June 2011


ஆசை ஆசையாய்

தினம் சமைத்திட ஆவல் தான்..

ஆயினும் என்றாவது தான்

பூர்த்தியாகிறது....

நீ வருவதாகச் சொல்லும் நாளில்!

மறந்துபோன

பேனா கொடுப்பதல்ல

நான் வந்த காரணம்..

தினமும் இது போல்

ஏதோ ஒன்றைக் கூறிக்கொண்டு

நுழைகிறேன்..

ஆயினும் நீயறிவாய்,

என் வரவிற்கான காரணம்..!

உன் நினைவு




தூங்கும் முன் கழற்றிவைத்து

விழித்தபின் எடுத்துப் பூட்டி

மறக்கும் முன் பத்திரப்படுத்தி

என்றோ ஒரு நாள் மறந்தபின்

தேடித்தவித்து..

கிடைக்கும் போது கிடைக்கட்டும்

என்றிருக்க,

உன் நினைவு

ஒன்றும் நகையில்லையே!


அன்பின் கனம் தாளாது

பார்வை தவிர்க்கும்

அந்த நொடி கூட இனிமைதான்!

வெளிச்சம்



ஞாயிறாக விருப்பமில்லை


ஞாலத்திற்கே பொதுவாய்!


திங்களாகவும் வேண்டேன்


திகட்டும் அளவில்


எழுதி மாய்வர்..


அதில் தேய்ந்தே காணாமல்


போகிறது நிலவும்!


மின்சாரமற்ற ஓர்


இரவில்..


உன்னருகில்


ஓர் மெழுகுவர்த்தியாய்…!


கடந்து போனபின்னும்

திரும்பிப் பார்க்கவைக்கிறது...

குழந்தையின் சிரிப்பு!

Friday, 10 June 2011




மூடிய கதவின் பின்னே
முத்தச் சத்தம்..
குழந்தையாகத்தானிருக்கும்!

Wednesday, 8 June 2011

கவனம்


அத்தனை கவனமும் 

உன் மீதிருக்க, எனக்கு

கவனக் குறைவாம்?!

Tuesday, 7 June 2011

அன்பு..


இட்டாலும் எடுத்தாலும்
கொடுத்தாலும்
நிறைவதேயன்றி குறைவதில்லை..
எள்ளளவே ஆனாலும் 
கொடுத்துப்பார்..
உன் உள்ளமும் முழுதாய் 
நிறைந்து போகும்..

Monday, 6 June 2011

தண்மையும் வெம்மையும்
தனியொரு உருவாய்..
தனக்கென வட்டமிட்டு
கோலோச்சும் அரசாங்கமாய்..
சுற்றியுள்ளவரெல்லாம்
அன்பால் வசப்பட்டு,
பேச மறந்தவராய்..
அப்படியும் எல்லோருக்கும்
எல்லாமுமாய்
எப்படி முடிகிறது உன்னால்??!! 

நீ...



உறவும் இன்றி பகையும் இன்றி
பொதுவாய் தொடங்கிய உறவு ..
கிளைகள் விட்டு வளரும்
என்று நினைக்காத வளர்ச்சி!
என்று கருகுமோ என்ற
கவலையிலா அன்பு!
என் உயிரைக் கண்டு
இப்படி ஒர்  உன்னதம்
எனக்கும் வேண்டும் என
இறைஞ்சுவோர் பலர்..
எனக்கு கிடைத்தது வெறும்
 நட்பல்ல … வரம்!!
எத்தனை பிறவி எடுப்பினும்
பரவாயில்லை…
எனக்காக இந்த அன்பையும்
அனுப்பி வையும் இறைவா!