Tuesday, 14 June 2011


ஆசை ஆசையாய்

தினம் சமைத்திட ஆவல் தான்..

ஆயினும் என்றாவது தான்

பூர்த்தியாகிறது....

நீ வருவதாகச் சொல்லும் நாளில்!

மறந்துபோன

பேனா கொடுப்பதல்ல

நான் வந்த காரணம்..

தினமும் இது போல்

ஏதோ ஒன்றைக் கூறிக்கொண்டு

நுழைகிறேன்..

ஆயினும் நீயறிவாய்,

என் வரவிற்கான காரணம்..!

உன் நினைவு




தூங்கும் முன் கழற்றிவைத்து

விழித்தபின் எடுத்துப் பூட்டி

மறக்கும் முன் பத்திரப்படுத்தி

என்றோ ஒரு நாள் மறந்தபின்

தேடித்தவித்து..

கிடைக்கும் போது கிடைக்கட்டும்

என்றிருக்க,

உன் நினைவு

ஒன்றும் நகையில்லையே!


அன்பின் கனம் தாளாது

பார்வை தவிர்க்கும்

அந்த நொடி கூட இனிமைதான்!

வெளிச்சம்



ஞாயிறாக விருப்பமில்லை


ஞாலத்திற்கே பொதுவாய்!


திங்களாகவும் வேண்டேன்


திகட்டும் அளவில்


எழுதி மாய்வர்..


அதில் தேய்ந்தே காணாமல்


போகிறது நிலவும்!


மின்சாரமற்ற ஓர்


இரவில்..


உன்னருகில்


ஓர் மெழுகுவர்த்தியாய்…!


கடந்து போனபின்னும்

திரும்பிப் பார்க்கவைக்கிறது...

குழந்தையின் சிரிப்பு!